×

மாம்பழ சின்னம் முடக்கம் கோரி ராமதாஸ் வழக்கு- அன்புமணிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் நாளைக்குள் பதிலளிக்குமாறு அன்புமணி ராமதாஸுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமகவில் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, ஆவணங்களின் அடிப்படையில் கட்சியும் மாம்பழம் சின்னமும் அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து கட்சிக்கு உரிமை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மாம்பழம் சின்னத்தை தாங்களே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், கட்சித் தலைமை தொடர்பான வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க கோரியும் பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்தார்.பாமக நிறுனவர் ராமதாஸ் தாக்கல் செய்த விசாரித்த  மனுவை  உச்சநீதிமன்றம், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்து விட்டதால், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது. எனவே, ராமதாஸ் 2 நாட்களில் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு மீது 3 நாட்களில் சிவில் நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி சென்னை 12வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி தர்ம பிரபு முன்பு ஆஜரான ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கோபு, உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி வழக்கை விசாரணை எடுத்துக்கொள்ள கேட்டுக் கொண்டார். அப்போது நீதிபதி மனுவாக தாக்கல் செய்து எதிர் தரப்புக்கும் தெரிவிக்குமாறு அதன் பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நேற்று தெரிவித்தார். அதன்படி ராமராஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த மனு இன்று நீதிபதி தர்ம பிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அன்புமணி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை எடுத்து நாளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி நாளை விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.