வெளிவராத உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல்! தயாரிப்பாளரின் புகாரும்! சவுக்கு சங்கரின் விளக்கமும்
இயக்குனர் கே.எஸ். அதியமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பாயல் ராஜ்புட், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏஞ்சல். திகில் மற்றும் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் ராம சரவணன் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ராம சரவணன் உதயநிதி அமைச்சரானதால் இந்த படத்தில் இருந்து விலகியதாகவும், படத்திற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் அதனை தரவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதன்படி, அவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஜூலை 2022 அன்று சேலத்தில் இயக்குனர் கே.எஸ்.அதியமான் மற்றும் நானும் உங்களை சந்தித்தோம். அதனை நினைவுக்கூர விரும்புகிறேன். ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பு 95% நிறைவடைந்தது. மீதமுள்ள ஷூட்டிங்கை முடிக்க இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளது, ஆனால் ஆகஸ்ட் 2022 இல் நீங்கள் அமைச்சரானதால் எங்கள் படத்திலிருந்து வெளியேற முடிவு செய்து எங்களிடம் தெரிவித்தீர்கள்.
படத்துக்கு செலவான மொத்த தொகையை நீங்கள் திருப்பி செலுத்துவதாகவும் உறுதி அளித்தீர்கள். ஆனால் தயாரிப்புக்குழு உங்கள் ரெட் ஜெயண்ட் அலுவலகப் பொறுப்பாளர் சரத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் படத்திற்கான மொத்த செலவில் 25% மட்டுமே எங்களுக்கு வழங்குவதாக கூறினர். இதற்காக செலவு செய்யப்பட்ட பணம் கஷ்டபட்டு சம்பாதித்தது. மேலும் வட்டிக்கு கடன் வாங்கப்பட்டது.
எங்கள் குழுவும் நானும் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக இந்த திட்டத்தால் பெரும் மன அழுத்தத்தில் உள்ளோம். நீங்களும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருவதால், தயாரிப்பாளர்கள் சந்திக்க வேண்டிய சிரமங்கள் மற்றும் தயாரிப்பு குழுவின் வலி உங்களுக்கும் நன்றாக தெரியும் என நம்புகிறோம்.
படத்தில் வேலை பார்த்த தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இத்திட்டத்தின் தேக்க நிலை, தொழிலாளர்களின் கனவையும் உழைப்பையும் நினைத்து பார்க்க முடியாத அளவு சிதைத்துவிட்டது. ஒரு நல்ல தலைவராக இருப்பதால், உடன் பணிபுரிந்த தொழிலாளர்களின் சிரமத்தை நீங்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். எனவே இந்த விஷயத்தில் விரைந்து முடிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ள ஏஞ்சல் பட பிரச்சனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிப்பாரா? இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.