×

கே.டி. ராஜேந்திர பாலாஜி விருதுநகர் போலீசிடம் ஒப்படைப்பு!!

 

தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே  அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான அவரை, பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 17 நாட்களுக்கு பின் அவரை  தனிப்படை போலீசார் விரட்டிப்பிடித்தனர். 

ஒசூரில் முகாமிட்டிருந்த தனிப்படை போலிசார், இன்று கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தொழிலதிபர் காரில் சுற்றித்திரிந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். அவர் தலைமறைவாக இருக்க உதவிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணன், நாகேஷ், பாண்டியராஜன் பாலாஜி உறவினர் வசந்த் குமார் உள்ளிட்ட 5 பேரையும் போலிசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநில தனியார் காரில் அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி என்னுமிடத்தில் தனிப்படை போலிசார் விருதுநகர் போலிசாரிடம் ஒப்படைத்தனர். அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்து செல்லப்பட்டனர்.