×

லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை: 18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம் - ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி!

 
ராஜஸ்தானை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும், 19 வயது இளைஞரும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்துடன் லிவ்-இன் முறையில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இந்த உறவுக்கு இருதரப்புப் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மிரட்டல்களும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி, இந்த லிவ்-இன் ஜோடி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம் நிராகரிப்பு:

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இளைஞருக்குச் சட்டப்பூர்வத் திருமண வயதான 21 வயது இன்னும் ஆகவில்லை என்பதால், அவர் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ முடியாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, "18 வயதைக் கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி எந்தத் தடையும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு:

நீதிபதி மேலும் கூறுகையில், "சட்டப்பூர்வத் திருமண வயது என்பது ஒருவரின் தனியுரிமையைப் பறிக்காது. இந்தியாவில் லிவ்-இன் உறவுமுறை என்பது சட்டவிரோதமோ அல்லது குற்றச்செயலோ அல்ல. வயது வந்தோரின் வாழ்வுரிமையைச் சட்டப்பிரிவு 21 பாதுகாக்கிறது; வாழும் இடத்தையும், வாழ்க்கைத் துணையையும் தேர்வு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. 18 வயதைக் கடந்த இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தால், அவர்களின் முடிவில் அரசு தலையிட முடியாது" என்று உத்தரவிட்டார். மேலும், மனுதாரர்களுக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில், உடனடியாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.