×

"மழைக்காலமானாலும் மக்களுக்கு பேருந்து சேவை தடையின்றி வழங்கப்படும்"

 

சென்னையில் பெய்த கனமழையால் ஒரே நாள் இரவில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் வெள்ள நீர் புகுந்துள்ள மந்தைவெளி பணிமனை, தி.நகர் பணிமனை, பேருந்து நிலையம் மற்றும் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள் சென்னையில் அமைந்துள்ளன.

இதில் மந்தைவெளி மற்றும் தி.நகர் ஆகிய இரண்டு பணிமனைகளில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, இந்த பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டேன். மந்தைவெளி பணிமனையில் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. தி.நகர் பேருந்து நிலையத்தில் மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த மழைக் காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் 17,576 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி பேருந்துகளின் சேவை வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.