×

திடீரென தேதியை மாற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்!

 

12-ஆம் தேதி  காலை 10:00 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடவிருப்பதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து முக்கியமான தகவலை வெளியிடுவதாக அண்மையில், ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். 

இந்நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில், “அனைவருக்கும் வணக்கம், 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு எனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிப்பதாக நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது பாரதிராஜா சார் அவர்களின் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு, குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்றதொரு தனிப்பட்ட துயரமாக எனக்குத் தோன்றுகிறது. பாரதிராஜா சார் மீதும், சினிமாத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன். அதற்குப் பதிலாக, 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிடுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.