×

அடுத்த 2 வாரங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்- ராதாகிருஷ்ணன்

 

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொரோனாவுக்காக தமிழ்நாட்டில் 1.23 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 7% படுக்கைகள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன. இதிலும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை விட, டெல்டா தொற்று பாதிப்பும் உள்ளது.  மீதமுள்ள 93% படுக்கைகள் தற்போது வரை காலியாக உள்ளன. தொற்று பாதித்த இவர்கள் அனைவரும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வெறும் 5 சதவிகிதம் பேர் தான் தற்போது வரை போட்டுக்கொண்டுள்ளனர். இவர்கள் தேவைக்கேற்ப தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட துணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு இல்லை என்று மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது, அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.  தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை, அவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும். 


டெல்டா வகை தொற்று 10-15 % அளவில் பதிவாகி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட 7% விழுக்காட்டினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 80% 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.