×

புதுச்சேரி மசாஜ் சென்டரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- மேலும் 2 பேர் கைது

 

புதுச்சேரியில் மஜாஜ் சென்டரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மதுரையை சேர்ந்த 2 பேரை உருளையன் பேட்டை போலீசார் கைது செய்தனர். 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அண்ணாநகரில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அங்கு விபச்சார தொழில் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதில் ஒருவர் 17 வயது சிறுமி என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பின்பு சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்த 40 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை வன்கொடுமை செய்தவர்களின் விபரங்களை சேகரித்து அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதை தொடர்ந்து இன்று சிறுமியை பலாத்காரம் செய்த மதுரையை சேர்ந்த அசோக், ஜனார்த்தனன்  ஆகியோரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 24 பேரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.