×

மழை பாதிப்பு... சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25,000 நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு! 

 

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டை மட்டுமல்ல புதுச்சேரியின் ஒருசில பகுதிகளையும் ஆட்டிப்படைத்திருக்கிறது. 15 வருடங்களுக்குப் பின் காரைக்காலில் மீண்டும் அதிகளவில் மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. நெற்பயிர்கள் மழையில் மூழ்கி நாசமாகியுள்ளன. இவற்றுக்கெல்லாம் நிவாரணம் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தொடர் மழை காரணமாக புதுவை, காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. 

25 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மழையால் வேலைவாய்ப்பின்றி கட்டடத் தொழிலாளர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பதிவு செய்துள்ள கட்டடத் தொழிலாளர் குடும்பத்துக்கு, ரேஷன் கார்டுக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.  மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும். மாடு இறந்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய், ஆடு இறந்திருந்தால் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். 

இதர பயிர்களுக்கும், அதிகாரிகளிடம் முழுமையான கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளேன். புதுவை, காரைக்காலில் முழுமையான கணக்கெடுப்பு நடத்தியபின் மத்திய அரசிடம் நிதி கோரப்படும். அடுத்த மழைக்குத் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்போம். வாய்க்கால் சீரமைத்துத் தூர்வாரும் பணியைச் சரியாகச் செய்யாததால் மறு டெண்டர் வைத்துள்ளோம். சேதமடைந்த நகர, கிராமப்புறச் சாலைகளைச் சீரமைக்க ரூ.186 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்குப் பின் சாலைகள் அமைக்கப்படும்" என்றார்.