×

தமிழகத்தில் தற்போதைய முக்கிய பிரச்சினை என்ன தெரியுமா?- அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

 

கர்ப்பிணிகள் நலனில் அக்கறை செலுத்தாவிட்டால் அது ஒட்டுமொத்தமாக அது வருங்காலத்தை சிதைத்து விடும் என தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். 

கோவையில் ஆசியா ஓசியானியா ஆராய்ச்சி மையம் மற்றும் பிறப்புறுப்பு நோய் தொற்று மற்றும் தசை வளர்ச்சி அமைப்பின் 11வது தேசிய மாநாடு அவிநாசி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பேருகால மருத்துவர்கள் மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கர்ப்பப்பை புற்றுநோய் இந்த மாநாட்டில் முக்கிய கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உலகளாவிய ஒழிப்பு என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கை நோக்கிய பயணம் என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் இன்றும் நாளையும் விவாதிக்கப்பட உள்ளது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “குழந்தைகள் இன்றி எந்த வருங்காலமும் இருக்க முடியாது, கர்ப்பிணிகள் நலனில் அக்கறை கொள்ளாமல் தவிர்த்தால் அது நமது வருங்காலத்தையே சிதைத்து விடும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போதைய முக்கிய பிரச்சினை நிதி ஆதாரமும் நிதி பெருக்குவதோ அல்ல. ஒதுக்கப்படும் நிதியை நலத்திட்டங்கள் வாயிலாக மக்களிடம் முறையாக கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகள் தான். பருவமடைந்த பெண்களுக்கு இந்த எச்.பி.வி வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும், கொரோனா காரணமாக 14 விழுக்காடாக இருந்த தடுப்பூசி விகிதம், 12 விழுக்காடாக குறைந்துள்ளது. 

தமிழக அரசு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பருவமடைந்த பெண்களுக்கு தடுப்பேசி செலுத்த சோதனை அடிப்படையில் முன்னெடுப்புகளை எடுக்க உள்ளது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகம் உள்ளது. முதன்மை மருத்துவம் மட்டும் இன்றி அடுத்த கட்ட மருத்துவ கட்டமைப்பும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று பல்வேறு படிப்பினைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாலேயே அதனை கடந்து வந்திருக்கிறோம். தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு 4 மருத்துவர்கள் என்கிற அளவில் இருப்பதன் மூலம் தமிழகம் பிற மாநிலங்களை விட முன்னோடி மாநிலமாக இருக்கிறது” எனக் கூறினார்.