×

“அரசியலும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம் என விஜய் வெளிநாட்டிற்கு தப்பி செல்லவுள்ளார்”- விஜயின் முன்னாள் மேலாளர்

 

தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனை போல ஊழல் செய்த போலி அரசியல்வாதிகள் ஓய்வெடுப்பதர்காக அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.அரசியலும் வேண்டாம்  சினிமாவும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்கே தப்பி செல்ல உள்ளார் விஜய் என நாகர்கோவிலில் பி.டி செல்வகுமார் பேட்டியளித்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி செல்வகுமார் அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து  அவருக்கு மாநில திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நாகர்கோவில் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறும்போது, திமுக தலைமை கழகத்திலிருந்து முடிவு செய்தால் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன். விஜய் எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு எதிராக களம் இறங்கி பணியாற்றுவேன். விஜய் ஏழை ரசிகர்களுக்கு செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டுவேன். விஜய் ரசிகர்களுக்கு எதுவுமே செய்ததில்லை.கும்பாபிஷேகம் நடத்துவது, கட்டவுட் வைப்பது என இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துள்ளனர். 

இளைஞர்களுக்கு தனது ரசிகர்களுக்கு வருவாய் பெற எந்த விதமான நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. தன்னை கரூரில் தேடி வந்தவர்கள் உயிரிழந்த போது அங்கிருந்து தப்பித்துச் சென்றவர் தான் விஜய்.கப்பல் கவிழ்ந்தால் கூட தான் உயிரை மாய்த்துக்கொண்டு பயணிகளை காப்பாற்றுபவர் தான் கேப்டன். அந்த விஷயத்தில் விஜய் மிகப்பெரிய தவறு செய்து விட்டார். தலைவர் என்றால் அவர்களை நம்பி வந்தவர்களை வாழ வைக்க வேண்டும். தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை போல போலி அரசியல்வாதிகள் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். பல கோடிகளை ஊழல் செய்த செங்கோட்டையன் மக்களுக்கு நல்லது செய்யவா வந்திருக்கிறார் என்றால் இல்லை மாறாக ஓய்வெடுப்பதற்கு இடம் வேண்டும். அதற்காக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் படு தோல்வி அடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்கு விஜய் தள்ளப்படுவார். அரசியலும் சினிமாவும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்கே தப்பி செல்ல உள்ளார். இளைஞர்களுக்கு விஜய் வரவு பெரும் ஆபத்து” என பேசினார்.