×

பிரதமர் மோடி தமிழகம் வரும் தேதியில் திடீர் மாற்றம்..! 

 

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.ம.முக., த.மா.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 23-ந்தேதி இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகர் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். இந்த கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்பும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

தி.மு.க. எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கவில்லை என்று கூறிவந்த நிலையில் தற்போது எய்ம்ஸ் கட்டிடம் எழுந்து நிற்கிறது. இதற்கு அடிக்கல் நாட்டிய இடத்திலேயே பிரதமர் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது என்றால் இந்த கூட்டம் பிப்ரவரி 28-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1-ந்தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

அன்றைய தினம் மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.