×

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் - கனிமொழி..!

 

நெல்லையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமையல் சிலிண்டர் கிடைப்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 

மக்கள் மிகப்பெரிய சிக்கலில் உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக அடிப்படை அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் அச்சம் உள்ளது. டாலருக்கு எதிராக உள்ள ரூபாய் மதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான பொருளாதார சூழலைச் சந்தித்து வருகிறோம்.

பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் பிரதமர் உள்ளிட்டோர் மக்களுக்கு மட்டுமே அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டக்கூடிய எந்த தகவலையும் சொல்லவில்லை. மக்களைப் பதற்றத்திற்கு உள்ளாக்கக்கூடிய மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடிய விஷயங்களை மட்டுமே தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில், மக்களை அரசு பாதுகாக்க, பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு அறிவிப்பையும் அவர்கள் சொல்லவில்லை. அனைவர் மனதிலும் எதிர்காலம் குறித்த கேள்விக் குறியும் அச்சமும் உருவாகியுள்ளது. புதிய அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்கிற கேள்விக்கு இப்போதுதான் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள் என பதிலளித்துச் சென்றார்.