×

"டபுள் எஞ்சின் அல்ல.. டப்பா எஞ்சின்"- என்டிஏ கூட்டணிக்கு எதிராக போஸ்டர்

 

"டபுள் எஞ்சின் அல்ல.. டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது என என்டிஏ கூட்டணியை சாடி கரூரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 


கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி செய்யும் டபுள் எஞ்சின் என வலியுறுத்திப் பேசினார். பிரதமரின் இந்த கருத்துக்கு அரசியல் ரீதியாகப் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், கரூர் மாநகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம் மற்றும் மனோகரா சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்தச் சுவரொட்டியில் ரயில் எஞ்சின் மீது பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் ஏறி நிற்பது போன்ற படம் அச்சிடப்பட்டுள்ளது. ‘டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது’ என்ற வாசகம் பெரிய எழுத்துக்களில் இடம் பெற்றுள்ளது. மேலும், சுவரொட்டியின் கீழ் பகுதியில் "அடிமைகளை விரட்டுவோம்.. தமிழ்நாட்டை காப்போம்"என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.