பிரபல தமிழ் இயக்குனர் வி சேகர் கவலைக்கிடம்..!
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குனர் என பெயரெடுத்தார் வி சேகர். இவர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, காலம் மாறிப் போச்சு போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இன்றளவும் கே டிவியில் வி சேகரின் படங்கள் ஒளிபரப்பானால், அதற்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. காலம் கடந்தும் இவர் படங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவர் இயக்குனர் கே பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். பின்னர் 1990-ம் ஆண்டு வெளிவந்த நீங்களும் ஹீரோ தான் என்கிற திரைப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் வி சேகர். 18 படங்கள் இயக்கியுள்ள வி சேகர், சின்னத்திரையிலும் பொறந்த வீடா புகுந்த வீடா, என்கிற சீரியலை இயக்கி இருக்கிறார். சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பானது. கடைசியாக தன் மகனை ஹீரோவாக வைத்து சரவண பொய்கை என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில், வி.சேகருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வி.சேகர் உடல்நலம் குறித்து அவரது மகன் காரல்மார்க்ஸ் சேகர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ் மக்களே... என் தந்தையும் மக்கள் இயக்குனருமான வி.சேகர் தற்போது தன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவர் விரைவில் உடல்நலம் பெற அன்பின் ஒளியாக ஒரு தீபம் ஏற்றி இறைவனை மனமார வேண்டிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.