×

அமுல் வருகை- துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடுக- பால் முகவர்கள் சங்கம்

 

அமுல் மற்றும் தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதலை கண்காணிக்க தவறிய பால்வள ஆணையரும், ஆவின் நிர்வாக இயக்குனருமாக இருந்த சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில எல்லையொட்டிய தமிழக வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமுல் நிறுவனம் பால் குளிரூட்டும் நிலையங்களை அமைத்திருப்பதாகவும், கிருஷ்ணகிரியில் 5ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதலை மேற்கொண்டு வருவதாகவும் வருகின்ற தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. ஏனெனில் அமுலாக இருந்தாலும், தனியார் பால் நிறுவனங்களாக இருந்தாலும் தமிழகத்தில் பால் கொள்முதல் நிலையங்களை நடத்தும் போது தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் செயல்படும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள DR என்று சொல்லக் கூடிய மாவட்ட பால் பதிவாளர்களுக்கும், பொது மேலாளர் கீழ் இயங்கும் Procurement Team, கால்நடை மருத்துவர்கள் மற்றும் Extension Assistant உள்ளிட்டோருக்கு தெரியாமல் அமுல் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைந்திருக்க வாய்ப்புகள் இல்லை. 

அமுல் நிறுவனம் குளிரூட்டும் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அவர்களுக்கு தெரிய வந்த தகவல்கள் மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும், இவர்களுக்கெல்லாம் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய பால்வள ஆணையருக்கும் தெரியாமல் அணுவும் அசைந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆவினுக்கான பால் கொள்முதல் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது என்றால் பால்வள ஆணையரும், ஆவின் நிர்வாக இயக்குனருமாக இருந்த சுப்பையன் ஐஏஎஸ், பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்களின் கீழ் இயங்கும் Procurement Team, கால்நடை மருத்துவர்கள் மற்றும் Extension Assistant உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டுள்ளனரோ..? என்கிற சந்தேகம் எழுகிறது.

எனவே தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆவினுக்கான பால் கொள்முதல் குறைவிற்கான காரணகர்த்தாக்களை அடையாளம் காண தீவிர விசாரணை நடத்திடவும், அமுல் மற்றும் தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதலை கண்காணிக்க தவறிய பால்வள ஆணையரும், ஆவின் நிர்வாக இயக்குனருமாக இருந்த சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும், புதிதாக பொறுப்பேற்றுள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.