×

வரும் 16ஆம் தேதி  சிறப்பு பேருந்து இயக்கப்படாது - முன்பதிவு செய்தவர்களுக்கு  முக்கிய அறிவிப்பு!!
 

 

வருகிற ஜன 16., ஆம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

வருகிற ஜனவரி 14,15,16 ஆகிய 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர். இதனால் மக்களின் வசதிக்காக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என இன்று முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்தது. கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஞாயிரன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அன்றைய தினம் அரசு பேருந்தில் வெளியூர் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு செலுத்திய முன்பதிவு கட்டணம் 2 நாட்களில் திருப்பித் தரப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 16ம் தேதி முன்பதிவு செய்தவர்கள் வேறொரு நாளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 16ஆம் தேதி  ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக  அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில்  பொங்கல் முடிந்து பணிக்குத் திரும்புவோர் மறுநாள் திங்கள் கிழமைதான் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.