×

மாரடைப்பால் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு.. வேலூர் அருகே சோகம்..

 

வேலூர் அருகே மாரடைப்பால் ஆயுதப்படை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..  

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியைச் சேர்ந்தவர் வானவர்மன் . 35 வயதான இவர்  கடந்த 2008-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். இவருக்கு சுமதி என்கிற மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  வேலூர் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்துள்ளார்.  குடும்பத்துடன் ஆயுதப்படை காவல் குடியிருப்பில் வசித்து வந்த வானவர்மன், இன்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளார்.  

 அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டதை அடுத்து வலியால் துடித்த அவர் மயங்கி விழுந்தார்.  உடனடியாக அவரை  அங்கிருந்த காவல்துறையினர்  மீட்டு வேலூரில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வானவர்மன் பரிதாபமாக  உயிரிழந்தார்.  இந்த சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காவலர் ஒருவர் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிகழ்வு , சக காவல்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.