“எனக்கும் அன்புமணிக்கும் இடையே மனக்கசப்பு இல்லை..”- ராமதாஸ் பேட்டி
தைலாபுரம் கூட்டத்திற்கு அன்புமணி வருவார், கலந்துக்கொள்வார். எங்களுக்குள் மனக்கசப்பு இல்லை என பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமைநிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குபின் பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “ஒரு காலத்தில் ஒருவர்கூட படிக்காத சமுதாயமாக வன்னியர் சமுதாயம் இருந்தது. இன்றைக்கு ஐந்தாயிரம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளோம். எல்லோரும் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள். நீதிபதிகள் வரை உருவாக்கியுள்ளோம். வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல, 115 சமுதாயத்திலும் உருவாகியுள்ளோம். சமூக நீதி என்றால் இந்திய அளவில் பேசக்கூடியவர், என்னைத் தவிர யாரும் கிடையாது. சிலரால் கூட்டத்திற்கு வர முடியவில்லை, நீதித்துறையில் இடஒதுக்கீடு வேண்டும். நீதிமன்றத்தில் சமூகநீதி இல்லை. இந்திய அளவில் சமூக நீதியை பேசுவது நான் ஒருவன்தான். நான் மட்டும்தான் அதை பேச முடியும். என்னை விட்டால் வேறு யாரும் பேச முடியாது. மற்றவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது.
தைலாபுரம் கூட்டத்திற்கு அன்புமணி வருவார், கலந்துக்கொள்வார். எங்களுக்குள் மனக்கசப்பு இல்லை. இனிப்பான செய்திகளை தான் இதுவரை சொல்லியுள்ளேன். இனிப்பான செய்திகளை சொல்லுவேன், மருத்துவர் என்பதால் கசப்பான மருந்துகளை கூட நான் தருவதில்லை. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் சீற்றம் குறையாது, அதனால் தான் நீச்சல் குளத்தில் குளித்த வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் அன்புமணி ராமதாசை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளிவந்தன, அதனை நான் செய்வேனா? இந்திய அளவில் சமூக நிதியை பேசுவது நான் ஒருவன்தான். நான் மட்டும்தான் அதை பேச முடியும். என்னைவிட்டால் வேறு யாரும் பேச முடியாது. மற்றவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது” என்றார்.