×

“ராமதாஸ் - அன்புமணி பிரச்சனையில் குளிர்காயும் அருள் இனிமேலும் இதை செய்தால் நடவடிக்கை”- பாலு

 

சேலம் அருள் பாமகவில் இருந்து நீக்கப்பட்டதால் காரில் பாமக கொடியை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக வழக்கறிஞர் பாலு பேட்டியளித்துள்ளார்.

பாமகவின் சட்டமன்றக் குழு தலைவராக தருமபுரி வெங்கடேசனை அங்கீகரித்து ,  இருக்கை ஒதுக்க வேண்டுமென பேரவை தலைவர் அப்பாவுவை சந்தித்து பாமக வழக்கறிஞர் பாலு வலியுறுத்தினார் . பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாமகவின் சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பில் மாற்றத்தை மேற்கொள்ள பேரவைத் தலைவர் தயங்குவது ஏன்..? பாமக சட்டமன்ற குழு தலைவராக  வெங்கடேசனுக்கு இருக்கை ஒதுக்கப்படாதது ஏன் என கேட்டோம்..? பேரவைத் தலைவரிடம் அரை மணி நேரம் பேசினோம். பல காரணங்களை பேரவைத் தலைவர் கூறினார். மயிலம் சிவகுமாரை கொறடாவாக நியமனம் செய்ததற்கு முன்னர் கடிதம் கேட்டோம். 

பேரவைத் தலைவர் அரசு கொறடா குறித்து மட்டுமே தாம் முடிவு செய்ய முடியும் என்றும் ,எதிர்க் கட்சிகளின் கொறடா குறித்து விதிகளின் படி எந்த முடிவையும் எடுக்க முடியாத என்றும் கூறியிருந்தார். அப்போதே அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். சட்டப் பேரவையில் வானளாவிய அதிகாரம் பேரவைத் தலைவருக்கு இருந்தாலும்   நியாயம் , தருமத்தின் அடிப்படையில் அவர் செயல்பட வேண்டும். நாளை எங்களுக்கு நல்ல முடிவு வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் கூறியுள்ளோம் . இறுதியாக அவர் கூறியது , பாமக சட்டமன்ற குழுத் தலைவர் பிரச்சனையில் அவை முன்னவரது (அமைச்சர் துரைமுருகன்)  ஆலோசனையைப் பெற்று முடிவு செய்வதாக கூறியுள்ளார். கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அன்புமணியை அங்கீகரித்துள்ளது. கட்சியின் தலைமை அலுவலகம் அன்புமணி வசம் உள்ளது.

சேலம் மேற்கு அருள் தரம் தாழ்ந்து ஆணவத்தில் , அகம்பாவத்தில் பேசுவது கண்டிக்கத்தக்கது. பாமக கொடியை பயன்படுத்த அருகதையும், துப்புமற்றவர் சேலம் அருள். பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அருள் கட்சிக்  கொடியை தனது காரில் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அன்புமணி மருத்துவமனை யில் தனது தந்தையை சந்திக்க நினைத்திருந்தால் யாரால் அதை தடுத்திருக்க முடியும். ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையிலான சிறு கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி குளிர்காயும் வேலையை அருள் நிறுத்தி கொள்ள வேண்டும். அவர் பாமகவின் சட்டமன்ற உறுப்பினர் அல்ல . இனி அவரை பாமகவை சார்ந்தவர் என பேரவை ஆவணத்தில் குறிப்பிடக் கூடாது என பேரவைத் தலைவரிடம் கூறியுள்ளோம்” என்றார்.