×

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்குக- அன்புமணி

 

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி  31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது, உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பா.ம.க.  தலைவர்  அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் நகரில் த.வெ.க.  தலைவர்  நடிகர்  விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்  வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியும்,  வேதனையும் அளிக்கின்றன.  உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன். பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை  எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.  

பரப்புரைக்கான  ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை  காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும்.  கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து  உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த  அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.