அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான ஈபிஎஸ்-க்கு பாமக வாழ்த்து!!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாமக வாழ்த்து கூறியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை தலைமையால் தொய்வு பெற்றிருக்கும் நிலையில் இருந்து மீண்டு வர, இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் , இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை போல ஒற்றை தலைமையின் கீழ் கழக நிர்வாகிகளுக்கும் ,கழக தொண்டர்களுக்கும் ,பொதுமக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அரசியல் வியூகங்களை விரைந்து செயல்படுத்துவதற்கும் ,கழக தலைமை நிலைய செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் , கழக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கழகத்தை வீறு கொண்டு எழுச்சி பெற , புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் தலைமை ஏற்று நடத்துமாறு ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பில் இப்பொழுது கேட்டுக்கொள்கிறது என்று குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.