×

10ம் வகுப்பு தேர்வில் தமிழுடன் உருதுவை கட்டாய பாடமாக்க கோரிய மனு தள்ளுபடி!

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், மொழித்தேர்வில் தமிழ் மட்டுமல்லாது, மொழி சிறுபான்மை மாணவர்கள், தங்களது தாய்மொழி பாடத்தையும் சேர்க்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுதொடர்பாக தமிழக அரசு 2 மாதங்களில் ஆய்வு செய்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என 201ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

பிற மாநிலங்களில் உருதுமொழிப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இவ்வாறு செய்யாவிட்டால் சிறுபான்மையினரின் மொழி கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துவிடும். எனவே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயமாக்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. 

அப்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை மொழி பாடத்தில் தேர்வு எழுத இந்தாண்டு (2022) மார்ச் வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், அதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டுமே தவிர, அதையே காரணமாகக் கூறி அடுத்தடுத்து வழக்குகள் தொடர முடியாது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல’’ எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.