மாநாட்டுக்கு அனுமதி கேட்ட தவெக.. 50 கேள்விகள் எழுப்பியுள்ள மதுரை காவல்துறை..!!
மதுரையில் மாநாடு நடத்த தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட கேள்விகளை மதுரை காவல்துறை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காணவுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. கட்சிக்கான அணிகள் உருவாக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் முழுமையடைந்துவிட்ட நிலையில், மாநாடு, மக்களை சந்திப்பது என அடுத்தக்கட்டத்திற்கு கட்சியை நகர்த்துகிறார் விஜய்.
ஏற்கனவே கடந்த ஆண்டு தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தென் மாவட்டங்களை மையப்படுத்தி பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ள விஜய், மதுரையில் தனது 2வது மாநாட்டை நடத்தவுள்ளார். அதுவும் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதி தவெக மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நேற்று (ஜூலை 16) நடைபெற்றது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடிஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு 506 ஏக்கரில் பிரம்மாண்டமாக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்திடம், மாநாட்டுக்கு அனுமதியும், பாதுகாப்பும் அளிக்கக்கோரி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மனு அளித்துள்ளார்.
இதனையடுத்து போக்குவர்த்து சிக்கல்கள் யாவை? விஜய் பயணிக்கும் வழிகள் என்ன? யார் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது? மாநாடு நடைபெறும் இடத்தை தொண்டர்கள் அணுகுவது எவ்வாறு? தோராயமாக எவ்வளவு தொண்டர்கள் பங்கேற்பார்கள்? என்பது உள்ளிட்ட 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை கேள்விகளுக்கும் தவெக அளிக்கும் பதில்களை பொறுத்தே மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.