×

பிப்.1 முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி!

 

| பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்  கடந்த டிசம்பர் 31-ம் தேதி கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது தமிழ்நாடு அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை அறிவித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை , பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட சென்னை கடற்கரைகளில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.  கொரோனா  காரணமாக மறு உத்தரவு வரும்வரை கடற்கரையின் மணல் பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதாகவும், பிரத்தியேக நடைபாதையில் மட்டும் நடை பயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. அதேபோல்  மணல் பரப்பில் நடைப்பயிற்சி செய்ய அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து புத்தாண்டு ,பொங்கல் நாட்களில் கூட மக்கள் கூட்டம் இல்லாமல் சென்னை கடற்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சென்னையில் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடற்கரைகளில் கூட்டம் கூட  கூடாது,  முக கவசம் அணிந்து, கொரோனா தடுப்பு  விதிகளை  மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.