உலகமயமாகிறார் பெரியார்..!! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறக்கவுள்ளாதாகவும், சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களை வெளியிட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை முதல் ஒரு வாரம் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்ல இருப்பதாகவும் , அங்கு ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்திருக்கக்கூடிய அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவாசான தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை நான் திறந்துவைக்க உள்ளேன். அதை எண்ணிப் பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறேன். தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி எழுந்தியிருந்தாலும் அவருடைய சிந்தனைகளை உலகத்தில் அனைவருக்கும் பொதுவானது. அவர் வலியுறுத்திய சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, ஏற்றத்தாழ்வின்மை, அனைவரும் சமம் என்கிற கருத்துக்களுக்கு எல்லைகள் கிடையாது. அப்படிப்பட அறிவு மேதை உலக அளவில் அங்கீகரிக்கப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை” என்று கூறினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “உலகமயமாகிறார் பெரியார்! "ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.