×

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை- 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!

 

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் 4.5 கிலோ தங்கத்தை சென்னை போலீசார்  மீட்டனர்.

பெரம்பூரில் கடந்த 10 ஆம் தேதி ஜெ.எல் கோல்டு பேலஸ் நகைக்கடையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் ஆதாரங்களை வைத்து பெங்களூருவில் வைத்து திவாகரன் மற்றும் கஜேந்திரன் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகியோரை பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் போலீசாரால் கைது செய்யப்பட்டு 2.4 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரையும் சென்னை போலீசார்  கைது செய்தனர். 

கொள்ளையர்களிடமிருந்து பெங்களூரு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2.4 கிலோ தங்க நகைகளை  சென்னை போலீசார் உரிமைக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தங்கத்தை பெற்றுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சென்னை தனிப்படை போலீசார் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக சம்பவ இடமான பெங்களூருவிற்கு கொள்ளையர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்  பெரம்பூர் நகைக்கடையில் 6 கொள்ளையர்கள்  நகைகளை கொள்ளையடித்த பின்பு பெங்களூருவில் பங்கு பிரித்து கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்ததும், கொள்ளையர்கள் விலையுயர்ந்த ஆடை, மதுபானம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் கொள்ளையர்களை கண்ட பெங்களூரு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவர்களை பிடித்து விசாரணை நடத்தும் போது தான் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலான நகைகளை கொள்ளையர்கள் உருக்கி இருப்பது தெரியவந்துள்ளது. 

கொள்ளையடித்த 8 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் உருக்கியதால், 7 கிலோ 800 கிராம் வந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். ஆக மொத்தம் இந்த வழக்கில் 4.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இரு கொள்ளையனான அருண் மற்றும் கவுதம் ஆகியோரை கைது செய்து மீதமுள்ள நகைகளை மீட்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரையும் இன்று விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.