மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம்… மனித நேயத்துடன் மத்திய – மாநில அரசுகள் நடக்க வேண்டும்! – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மனித நேயத்துடன் செயல்பட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கொரோனா பேரிடர் காலத்தில் உயிரைக் கொடுத்து பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஊதியம் தராமல் இழுத்தடித்தால் கிரிமினல் தண்டணை கொடுக்கப்படும் என, மத்திய, மாநில அரசுகளைப் பார்த்து உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படும் மருத்துவர்கள், மற்றொரு தாயாக பாவிக்கப்படும் செவிலியர்கள், நோய் பரவலை எதிர்த்து நேரிடையாக போராடும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத சூழலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் இந்த அரசுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதில் ஆச்சரியம் இல்லை.
தமிழகத்தில் பல முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் கடுமையாக கசக்கி பிழிந்து வேலை வாங்கப்பட்டு, பல மாதங்களாக ஊதியம் பெறாமல் அவதிப்படும் பரிதாப நிலையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உயிரைக் காப்பாற்றுவர்களையே மதிக்காத அரசுகள், உயிருக்குப் போராடும் ஏழை,எளிய நோயாளிகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்வார்கள்?
சென்னையில் உள்ள மிக முக்கிய 5 அரசு மருத்துவமனைகளுக்கான 13 பிரிவுகளில் மொத்தம் 2,355 பணியாளர்கள் பணியிடங்களுக்கு தம்மிடம் விண்ணக்கலாம் என ஜென்டில்மேன் என்ற நிறுவனம் விளம்பரம் தந்தது. விண்ணப்பித்தவர்களிடம் மூன்று மாதகால தற்காலிக பணிக்கு ஒரு மாத ஊதியத்தை அந்த நிறுவனம் கமிஷனாகக் கேட்ட விவரம் ஊடகங்களில் வெளியானதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.
மருத்துவர்கள் எல்லாம் கடவுளுக்கு சமமானவர்கள் என்றும், சுகாதாரப் பணியாளர்களின் கால்களைக் கழுவி வணங்க வேண்டும் என அரசுகள் இதுவரை சொல்லிவந்தது கபட நாடகமே என்பதை, உச்ச நீதிமன்றம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கோபத்தை பாடமாக எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இனியாவது மனித நேயத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.