அரசு மருத்துவமனையில் பரபரப்பு: நோயாளிக்கு இ.சி.ஜி. எடுத்த காவலாளி..!
ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கடந்த 5-ந்தேதி இரவு நெஞ்சுவலி காரணமாக நோயாளி ஒருவர் வந்தார். அப்போது பணியில் 2 செவிலியர்கள் மட்டுமே இருந்ததால் நோயாளிக்கு மருத்துவமனையில் பணிபுரியும் காவலாளி ரஞ்சித் என்பவர் இ.சி.ஜி. எடுத்து அதன் ரிப்போர்ட்டை எடுத்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமையல் செய்யும் பெண் ஒருவர், காயமடைந்து வந்த நோயாளிக்கு தையல் போட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது காவலாளி ஒருவர் இ.சி.ஜி. எடுத்து ரிப்போர்ட்டை எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘செவிலியர் தான் இ.சி.ஜி. எடுக்க முடியும், இரவு நேரம் என்பதால் செவிலியருக்கு காவலாளி உதவிக்காக நின்றுள்ளார். காவலாளி நேரடியாக இ.சி.ஜி. எடுக்கும் பணியில் ஈடுபடவில்லை' என விளக்கம் அளித்தனர்.