×

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசம் அணிவிப்பு

 

தேவர் ஜெயந்திக்காக மதுரையில் வங்கியிலிருந்து பெறப்பட்ட தங்க கவசம் பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வரும் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 63 வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு 4.5 கோடி( அப்போது மதிப்பு) மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் அதிமுக சார்பில் அணிவித்தார்.வருடா வருடம் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வின் போது அணிவிக்க பட்டு பின்னர் மதுரையில் வங்கி பெட்டகத்தில் வைக்க படும். இந்த ஆண்டுக்காக இன்று தங்க கவசம் மதுரை வங்கிப் பெட்டகத்திலிருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவலய பொறுப்பாளர் காந்திமீனாள் முன்னிலையில் மதுரையில் பெறப்பட்டு தங்ககவசம் பசும்பொன் எடுத்துவரப்பட்டது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிவித்த வெள்ளி கவசம் அகற்றப்பட்டு அதிமுக சார்பில் உள்ள தங்க கவசம் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நினைவாலய பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் தேவர் நினைவிடத்தில் தங்ககவசம் ஒருவாரம் அணிவிக்க பட்டு அடுத்த வாரம் மதுரை வங்கி லாக்கருக்கு கொண்டு செல்லப்படும். தங்க கவசத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், “அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைத்துள்ளார், அது விரைவில் நிறைவேறும்” என்றார்.