×

“யாரும் உரிமை கோர முடியாது”- ஐகோர்ட்டில் பராசக்தி படத் தயாரிப்பு நிறுவனம் பதில்

 

இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  விளக்கமளித்துள்ளது.

​சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படத்தின் கதை தனது 'செம்மொழி' கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில்  வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 1965ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஒரு வரலாற்று நிகழ்வு.  வரலாற்றுச் சம்பவங்கள் சமூகப் போராட்டங்கள் மீது எந்த தனிநபரும் காப்புரிமையோ அல்லது தனியுரிமையோ கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம், ஆனால்  கதாபாத்திரங்கள், வசனங்கள் மற்றும் திரைக்கதை முற்றிலும் கற்பனையானவை மற்றும் தனித்துவமானவை என்றும் தயாரிப்பு நிறுவனம்  விளக்கமளித்துள்ளது. அப்போது மனுதாரர் தரப்பில் ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர். ஆனால் எந்த  தடை உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணையை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, பிப்ரவரி 9 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.