பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியர்
பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கயத்தாறு பகுதியில் பன்னீர்குளம் பஞ்சாயத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த பன்னீர்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர் சீனிவாசன்.
43 வயதான இந்த சீனிவாசன் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்திருக்கிறார். ஆனால் திருமணம் செய்யாமலேயே அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் மாணவி ஏழுமாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் சீனிவாசனிடம் சென்று அந்த மாணவி திருமணம் செய்துகொள்ள கேட்டிருக்கிறார். அதற்கு சீனிவாசன் மறுத்திருக்கிறார்.
இதை அடுத்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் விசாரணை நடத்தி இருக்கிறார். அதன்பின்னர் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பின்னர் சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.