“2008-க்கு பிறகு தற்போதுதான் மழைநீர் தேங்காமல் சென்றது”.. முதல்வருக்கு மக்கள் நன்றி
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் மழைநீர் தேங்காமல் சென்றது என ஆய்வுப் பணியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் நேரிடையாக ஒன்று திரண்டு நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2024) 2-ஆம் நாளாக கிண்டி ரேஸ் கோர்ஸ், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் நேரிடையாக பார்வையிட்டு மேற்கொள்ளப்படும் மழைவெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிப் பகுதியில் பொதுமக்கள் ஒன்று திரண்டு முதலமைச்சரிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 14.6.2024 அன்று நள்ளிரவில் பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு செய்து மழைநீர் தேங்காமல் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அப்பணி நடைபெறும்போது மறுபடியும் நேரிடையாகச் சென்று பார்வையிட்டு துரிதப்படுத்தினார். அதன் விளைவாக இப்பகுதியில் நேற்று பெய்த கன மழையின்போதும், 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது தான் மழைநீர் எங்கும் தேங்காமல் சென்றது. துரிதமான நடவடிக்கையினை ஒரே இரவில் மேற்கொண்டமைக்காக இப்பகுதி மக்களின் முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக கூறினார்.