×

அறுவடை நேரத்தில் அடியோடு சாய்ந்த நெற்கதிர்கள்: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்ப இபிஎஸ் கோரிக்கை

 

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சில இடங்களில் பெய்த கனமழை, 2,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள், எதிர்பாராத மழையால் சேதமடைந்துள்ளன. அதனால் விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.

அவர்கள் கண்ணீரை துடைப்பது த.வெ.க., கூட்டணி அரசின் கடமை. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடாத நிலையில், நிலத்தடி நீரை நம்பி, கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள், நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கியதால், கடும் வேதனையில் உள்ளனர்.

வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை, மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். பயிர் சேத விபரங்களை, முழுமையாக கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும், ஏக்கருக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.