×

படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் கைது

 


படப்பை குணா தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரை பிடிக்கும் முயற்சியில் ஆதரவாளர்களை கைது செய்து வரும் போலீஸ், குணாவின் மனைவி எல்லம்மாளையும் கைது செய்திருக்கிறது.

குற்றச்செயல்கள் அதிகரிப்பதால்  தொழிலதிபர்களின் அடுத்தடுத்த புகார்களால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ரவுடிகள் தொல்லை அதிகரித்துவிட்டது என்று புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்ட எடிஎஸ்பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டிருக்கிறார்.  அன்று முதல் வெள்ளத்துரை மூன்று மாவட்டங்களிலும்  குறிப்பாக தொழில்நகரமான மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசுக்கு நீண்டநாளாக தலைவலியாக இருப்பவர் ரவுடி படப்பை குணா.  இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து அடிதடி நடத்துவது தொழிற்சாலைகளில் நிறுவனங்களை மிரட்டுவது,   சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு புகார்கள் குவிந்து வருகின்றன.  கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என்று 24 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.  பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார்.

குணா மீது இருக்கும் வழக்குகளை எல்லாம் எடுத்து அதில் அவரை கைது செய்வதற்கு ஒருபக்கம் போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  அதே நேரம்
 குணாவிற்கு போலீசில் இருந்துகொண்டே உதவி செய்ததாக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரியும்,  ரைட்டர் ராஜேஷும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  குணாவுக்கு யார் யாரெல்லாம் உதவி செய்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தன்னை போலீஸ் தேடுகிறது என்று தெரிந்ததும் குணா தலைமறைவாக இருந்து வருகிறார். குணா தலைமறைவாக இருப்பதால் அவரை பிடிப்பதற்காக அவருக்கு வேண்டியவர்களை அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.   குணாவிற்கு வலது கரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சிவாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  போந்தூர் சேட்டு என்பவரையும் அதே வழக்கில் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.  

 இதனால் அவரது மனைவி எல்லம்மாளை போலீசார் கைது செய்துள்ளனர். எல்லம்மாள் மீதும் சில வழக்குகள் உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.   ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் பதவியை கைப்பற்றும் முயற்சியில் தோல்வி அடைந்தவர்.   பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணன் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .  இந்த நிலையில் இன்று காலையில் ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் இல்லத்தில் இருந்த எல்லம்மாளை தனிப்படை போலீசார் வழக்கு விசாரணைக்காக கைது செய்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.