×

‘வடமாநிலத் தொழிலாளர்களை தமிழகத்துக்கு அழைக்கக்கூடாது’ காரணம் சொல்கிறார் பெ.மணியரசன்

கொரோனா நோய்த் தொற்று இந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் அதிகரித்தது. அதனால், இந்தியா முழுக்கவே லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. லாக்டெளன் நீண்ட நாள்களுக்கு நீடிக்கும் என்று தொடக்கம் முதலே பேசப்பட்டு வந்ததால் அதுவரை வேலை கிடைப்பது சிரமம் என்று சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். குறிப்பாக, தமிழகத்திலிருந்து பணியாற்றிய வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டனர். ஏராளமான தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் தங்கள் குழந்தைகளையும் உடமைகளையும் தூக்கிக்கொண்டு சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர். அப்படிச் சென்றவர்களில்
 

கொரோனா நோய்த் தொற்று இந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் அதிகரித்தது. அதனால், இந்தியா முழுக்கவே லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. லாக்டெளன் நீண்ட நாள்களுக்கு நீடிக்கும் என்று தொடக்கம் முதலே பேசப்பட்டு வந்ததால் அதுவரை வேலை கிடைப்பது சிரமம் என்று சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். குறிப்பாக, தமிழகத்திலிருந்து பணியாற்றிய வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டனர். ஏராளமான தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் தங்கள் குழந்தைகளையும் உடமைகளையும் தூக்கிக்கொண்டு சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர். அப்படிச் சென்றவர்களில் இறந்தவர்களும் பலர் உண்டு.

இந்நிலையில் அவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைக்கக்கூடாது என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர். ஏன் அவர்களை அழைக்கக்கூடாது என்பதற்கு விரிவான அறிக்கையில் காரணங்களை அடுக்குகிறார் பெ.மணியரசன்.

migrants

அந்த அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 17.07.2020 அன்று ஈரோடு சென்றிருந்தபோது, அம்மாவட்ட சிறுதொழில் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்கள் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை விண்ணப்பம் தந்துள்ளார்கள். அதில், ஈரோட்டில் வேலை பார்த்த 25,000 வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனாவினால் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். எனவே, இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை என்றும், வடமாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு மீண்டும் 25,000 தொழிலாளர்களை ஈரோட்டுக்குத் திருப்பி அழைத்து வர வேண்டுமென்றும் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வடமாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊர் சென்றுவிட்டதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு, கடந்த 16.06.2020 அன்று “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைம்” (Tamilnadu Private Job Portal) – www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதில் தொழிலாளர் வேண்டுவோரும், வேலை வேண்டுவோரும் தங்களது முகவரியைப் பதிவு செய்து கொண்டால், அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வோம் என்று கூறியிருந்தார்கள். அந்த இணையதளம் செயல்படுகிறதா? அதன் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை இதுவரை அனுப்பி வைத்திருக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

“தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக வேலை கோரும் திறன் பெற்ற / திறன் குறைந்த மற்றும் தொழில் பயிற்சி பெற்ற அனைவரையும் பதிவு செய்து, எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தத் தகுதியில் தொழிலாளர் தேவைப்படுகிறார்களோ, அவர்களை வழங்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழ்நாடு அரகக்குக் கோரிக்கை வைத்து வருகிறது.

மீண்டும் வடமாநிலத் தொழிலாளிகளை அழைத்து வருவதால் பின்வரும் பாதிப்புகள் உருவாகும் ஆபத்து உள்ளது. ஒன்று, கொரோனா கொள்ளைத் தொற்று நோய் மேலும் பரவும் அபாயம். இரண்டு, மண்ணின் மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது வெளி மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் அநீதி. மூன்று, வடமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குவியும்போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக – தமிழ் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட தாயகமாக நீடிக்காமல் இந்தி மாநிலமாக மாறிவிடும் ஆபத்து.

மேற்கண்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுத் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழிலாளிகளை தமிழ்நாட்டிலிருந்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், வடமாநிங்களிலிருந்து தொழிலாளர்களை அழைக்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.