×

1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள்!

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக  1,01,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ,இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம் ,மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் ,ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம் , முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியத் திட்டம் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஆகிய ஓய்வூதிய திட்டங்களின் வாயிலாக இதுநாள்வரை 33 லட்சத்து 33 ஆயிரத்து 263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டங்களுக்கு என 2021-22 ஆம் ஆண்டிற்கான திருந்திய வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் 4807.56 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில்,  மாநில அளவில் ஒரு லட்சத்து ஆயிரத்து 474 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஓய்வுதியம் வழங்கிடும்,  விதமாக தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 48,087 பயனாளிகளுக்கும் , இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1359 பயனாளிகளுக்கும்,  இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 4340 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1,01,474 பயனாளிகளுக்கு  ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் இன்று 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ,தலைமை செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர்  கலந்து கொண்டனர்.