×

#JUSTIN அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் விசாரணை நடத்த உத்தரவு 

 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து எம்.பி.,  எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கிய நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

 பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும் , சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட  4 பேர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தர்மராஜ் , பாலாஜி , ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.  இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தொடங்கிய நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.  அத்துடன் வழக்கை ஆரம்ப கட்டத்தில் இருந்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.  இது குறித்து வழக்கு பதிவு செய்யாத மத்திய குற்ற பிரிவு காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்த நிலையில் , சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும் , செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை  ரத்து செய்த  உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்களை நீதிபதிகள்  கிருஷ்ணமூராரி , ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடியை என தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சிறப்பு விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.