ஓபிஎஸ் வருகை திமுகவிற்கு பலமல்ல.. பலவீனம்! - பரிதாப நிலையில் ஸ்டாலின்' என தமிழிசை தாக்கு..!
சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், திமுக தனது தாய் கழகம் என்றும், ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்துகிறார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில்,ஓபிஎஸின் பேச்சை தமிழகத்தில் இருக்கும் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என முன்னாள் கவர்னரும், பாஜ நிர்வாகியுமான தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை;
வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக திமுக தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எப்பொழுது, ஓபிஎஸ் தனிப்பட்ட முறையில் அவர் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும், தனது வாயால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல், தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது, தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ, எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டசபையில் மிக மோசமாக நடத்தினார்கள், அந்த கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தாய் கழகம் இணைந்ததைப் போல ஒரு உணர்கிறேன் என்று சொன்னால், அது தமிழகத்தில் உள்ள யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
இன்னும் சொல்லப்போனால் திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால், இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு, அவர்கள் தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் என்றால், திமுகவின் பரிதாப நிலையை தான் எண்ண வேண்டி இருக்கிறது. ஓபிஎஸின் திமுகவின் சேர்க்கை திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.