×

தமிழக மீனவர்களை விடுவிக்க  ரூ.1 கோடி கேட்டு இலங்கை நீதிமன்றம் - மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கடிதம்!!

 

இலங்கையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் 1 கோடி கேட்டுள்ள விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு அண்மையில் இலங்கை நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்கள் சிறையில் இருந்து வெளி வர நினைத்தால் ஒவ்வொரு மீனவரும் தலா ஒரு கோடி ரூபாய் செலுத்திவிட்டு பிணையில் செல்லலாம் என்று உத்தரவிட்டது.  இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் நீதிக்குப் புறம்பானது. என்றும் தமிழக மீனவர்கள் மீது மிகப் பெரும் அநீதியை இழைத்துள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

இந்தநிலையில் தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, இன்று  ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 23 ஆம் தேதி,  தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  மேலும் கைது செய்யப்பட்டுள்ள  ஏழை மீனவர்களை விடுவிக்க, ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் தமிழக மீனவர்களின் தண்டனையை அதிகப்படுத்துவதாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மீனவர்களை விடுவிக்க தலா 1 கோடி ரூபாய் அபராதமாக கட்ட சொல்வது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் உள்ளது. தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.