×

தமிழகத்தின் கஜானா காலி; வெள்ளை அறிக்கையை வெளியிட்ட பியூஷ் கோயல்..! 

 

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது;

"தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை குறித்து நான் வெளியிட்டிருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, மாநிலம் எவ்வளவு அபாயகரமான சூழலில் உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இன்று தமிழகத்தின் கடன் சுமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதுமட்டுமன்றி, டான்ஜெட்கோ (TANGEDCO) போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த மெகா கடன்களுக்கு முதல்வர் ஸ்டாலினிடம் எந்தப் பதிலும் இல்லை. உண்மையை மறைக்க அவர் பொய்யான கதைகளைக் கூறி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்.

திருவள்ளுவரும், பெருந்தலைவர் காமராஜரும் வாழ்ந்த இந்த புனிதமான பூமி, இன்று ஸ்டாலின் குடும்பத்தின் 'சொந்த ஏடிஎம் மிஷின்' போலச் செயல்படுவது வேதனையளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி என அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கைகளும் இந்த ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டில் நனைந்துள்ளன. திமுக அரசின் இந்தத் தவறான போக்கால் தமிழ்நாடு இன்று திவால் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு வாங்கிய கடன்கள் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளன. நான் கேட்க விரும்புவது இதுதான்: ஒரு அரசு கடன் வாங்கி புதிய நெடுஞ்சாலைகளோ, மின் வழித்தடங்களோ அல்லது சென்னையின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் கட்டமைப்பு வசதிகளையோ உருவாக்கினால் அதை மக்கள் ஏற்பார்கள். ஆனால், இவ்வளவு கடன் வாங்கி நீங்கள் என்ன புதிய சொத்துக்களை உருவாக்கியுள்ளீர்கள்?

இந்த ஆண்டு மட்டும் கடனுக்கான வட்டியாக 76,000 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. வட்டியும், சம்பளமும் கொடுத்தது போக தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த அரசிடம் நிதி ஏதும் மிச்சம் இல்லை.

மத்திய அரசு தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக மட்டும் 80,000 கோடி ரூபாய்க்கும் மேல் வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு முன்பு 7 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதத்தால் தற்போது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வளவு கூடுதல் வருவாய் கிடைத்தும், அந்தப் பணம் எங்கே போனது? மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? என்பதைத் திமுக அரசு விளக்க மறுப்பது ஏன்?

12 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகத் திமுக அரசு தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் உண்மையில் களத்தில் 10 சதவீத முதலீடு கூட நடக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய 'MOU Scam'. ஸ்டாலின் குடும்பத்தின் ஊழல் மற்றும் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கைக் கண்டு முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வர அஞ்சுகிறார்கள். இதனால், கடந்த சில காலங்களில் மட்டும் சுமார் 15,000 சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) மூடப்பட்டுள்ளன; 5 லட்சம் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாக, அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 28,000 ஊழியர்களுக்கு கடந்த 25 மாதங்களாக பி.எஃப் (PF) மற்றும் பணிக்கொடை (Gratuity) வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களின் ஓய்வுக்காலச் சேமிப்பைக் கூட திருடும் ஒரு அரசாகத் திமுக அரசு மாறியுள்ளது.

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் பொருளாதாரத்தையும் திட்டமிட்டுச் சீரழித்து வரும் இந்தத் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்."

இவ்வாறு பியூஷ் கோயல் அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.