×

ஆக.5-ல் அ.தி.மு.க. சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை நகராட்சி சந்தைகடை ஏலத்தில் முறைகேடு செய்து நகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மின் மயானம் பல மாதங்களாக செயல்படுவதில்லை. நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள், கான்கிரீட் சாலைகள், சாக்கடை கால்வாய்கள் தரமற்று அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவதிலும், புதிய வரி விதிப்பிலும் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இங்குள்ள சாக்கடைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது 

இந்நிலையில், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை நகராட்சி சந்தைகடை ஏலத்தில் முறைகேடு செய்து நகராட்சிக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியும்; நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கோடும் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அத்தியவாசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 5.8.2025 செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில், காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வராஜ், தலைமையிலும்; கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அருண்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் சின்னராஜ், காரமடை நகரக் கழகச் செயலாளர் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

 இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.