×

ஆசிரியர் உமா மகேஸ்வரி தற்காலிக பணி நீக்கம் - ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

 

பள்ளிக் கல்வித் துறையில் நிலவும் குறைகளை சுட்டிக்காட்டிய அரசு பள்ளி ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதிலும், கிராமப்புறங்களில் மக்களிடையே நிலவும் அறியாமையை நீக்குவதிலும், சமூக, பொருளாதார மற்றும் சுகாதார நிலைகளை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கினை வகிப்பவர்கள் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட ஆசிரியர்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும். செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த திருமதி உமா மகேஸ்வரி என்பவர் பொதுமக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றியும் தனது முகநூல் பக்கத்தில் கட்டுரையாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஆசிரியரின் கடமை.