கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்ட தமிழக மீனவ கிராமங்கள் - சீமான் கண்டனம்
கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழக மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழக மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். இந்திய ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் தமிழக மீனவ கிராமங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் கடற்கரை கிராமங்களைத் தனியார் பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்க முயலும் மோடி அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது. கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள புதிய இந்திய வரைபடத்தில் தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு, புஷ்பவனம், விழுந்தமாவடி உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன.
பன்னாட்டு பெருமுதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக சொந்த நாட்டு கடற்கரைப் பகுதிகளை வளவேட்டையாடும் வாயில்களாக மாற்றி கடல் வளங்களையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்தொழிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே, மத்திய அரசு கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள புதிய இந்திய வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழக மீனவ கிராமங்களின் பெயர்களையும் உடனடியாகச் சேர்த்து பதிவு செய்திட உத்தரவிட வேண்டுமென்றும், காட்டுப்பள்ளி உள்ளிட்ட தமிழகத்தின் எந்தவொரு கடற்கரைப் பகுதியிலும் தனியார் நிறுவனங்கள் துறைமுகங்கள் அமைக்க அனுமதிக்க கூடாதெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.