×

3% விளையாட்டு இடஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு - அரசாணை வெளியீடு!

 

விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களுக்கும் சாதனை படைத்தவர்களுக்கும் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது ஆரம்பத்தில் 2 சதவீதமாக இருந்தது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டார். இந்தப் பிரிவில் பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பம் இணைக்கப்படவில்லை. சிலம்பம் விளையாட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதையடுத்து சிலம்பத்தையும் 3 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்குமாறு சிலம்பம் கற்கும் மாணவர்களும், கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர்களும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. எனினும் புதிதாக வந்த திமுக அரசு இந்தக் கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சிலம்பம் சேர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல துறை சார்ந்த அமைச்சர் மெய்யநாதனும் இன்னும் சில நாட்களில் அரசாணை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். தற்போது 3 சதவீத இடஒதுக்கீட்டில் சிலம்பத்தை சேர்த்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  தேசிய, மாநில அளவில் சிலம்பப் போட்டியில் சாதனை படைப்பவர்கள் இந்த இடஒதுக்கீட்டால் பயன்பெறுவார்கள்.