×

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டில் அரசியல் உள்நோக்கமா? - ராமதாஸ் பதில் மனு தாக்கல்!

 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பட்டன. இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், "தமிழ்நாட்டில் 1993ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு சட்டத்தின்படி, பட்டியலினத்தவருக்கு 18 சதவீதம், பழங்குடியினத்தவருக்கு ஒரு சதவீதம், எம்பிசியினருக்கு 20 சதவீதம், பிசி வகுப்பினருக்கு 30 சதவீதம் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.

இதில், எம்பிசி இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் அறிக்கையின் அடிப்படையிலும், மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையிலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினருக்கு 7 சதவீதமும், பிற பிரிவினருக்கு 2.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கான இந்த உள் இடஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

அரசியல் உள்நோக்கத்துடன் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த தற்போதைய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது தெளிவாகும். இந்த உள் ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியகுல சத்ரியர் பிரிவில் 7 சாதியினர் உள்ளனர்.

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி குலசேகரன் கமிட்டி அமைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்யலாமா, வேண்டாமா என்பதை ஆய்வுசெய்யவே அமைக்கப்பட்டது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.