×

புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை; முழு ஊரடங்கு இல்லை

 

புதுவையில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை என்றும் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்று பரவலை கட்டுபடுத்த பல மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவிட் மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை என்றாலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.