×

“21 வயதிற்கு குறைவான நபர்களுக்கு மதுபானம் விற்கப்படாது”- தமிழக அரசு அதிரடி

 

21 வயதிற்கு குறைவான நபர்களுக்கு மது விற்க கூடாது. வயது குறித்து சந்தேகம் இருந்தால் அடையாள அட்டையை பார்க்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மாநிலம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் கீழ் உரிமம் பெற்ற அனைத்து FL2 மற்றும் FL3 வளாகங்களிலும் பின்வரும் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும்.

21 வயதிற்குக் குறைவான எந்த நபருக்கும் மதுபானம் விற்கப்படவோ, வழங்கப்படவோ, விநியோகிக்கப்படவோ அல்லது பரிமாறப்படவோ கூடாது. ஒருவரின் வயது குறித்து சந்தேகம் இருப்பின், மதுபானம் வழங்குவதற்கு முன் அவரின் வயதிற்கான செல்லுபடியாகும் ஆவணச் சான்றுகள் சரிபார்க்கப்பட வேண்டும். அனைத்து FL2 உரிமம் பெற்ற கிளப்புகளும் தங்களது பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும். FL2 மற்றும் FL3 பார்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு நேரங்கள் எந்தவித விலகலும் இன்றி கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

FL2 உரிமம் பெற்ற கிளப்புகளில், பார் செயல்பாடு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். கிளப் நிர்வாகங்கள், கிளப் நிறுவப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப பிற பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு மற்றும் சமூகச் செயல்பாடுகள் தொடர்ந்து மற்றும் பயனுள்ளதாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட அறிவுறுத்தல்களை அனைத்து உரிமதாரர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937, அதன் கீழ் இயற்றப்பட்ட விதிமுறைகள் அல்லது உரிம நிபந்தனைகள் ஆகியவற்றின் ஏதேனும் மீறல்கள் மிகவும் தீவிரமாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.