நிபா வைரஸ் பாதிப்பு- தீவிரமாக கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர் மூன்று நாள் காய்ச்சல், வலிப்புத்தாக்கங்கள் மற்றும்/அல்லது தலைவலி, வாந்தி உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு செல்ல பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய்த்தொற்று. பழங்களை உண்ணும் வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதா்களுக்கு இது பரவுகிறது. வௌவாலின் உமிழ்நீா் படா்ந்த பழங்களை சாப்பிடுவது அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடா்பு கொள்வதன் மூலமாக நோய்த் தொற்று பரவுகிறது
காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுத்திணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்றவை முக்கிய அறிகுறிகள். குறிப்பாக, கேரளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்தபிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரைத் தொடா்பு கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால், அவா்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கழுவப்படாத அல்லது கீழே விழுந்த பழங்களைச் சாப்பிடுவதைத் தவிா்க்கவும். சாப்பிடுவதற்கு முன்பு அனைத்து பழங்களையும் நன்கு கழுவ வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக சோப்பால் கைகளை கழுவ வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தால், மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்கவும் பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.