×

கனமழையால் வீடு இடிந்து 9 பேர் பலி : ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!!

 

கனமழையினால் வீடுகள்  இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பேரணாம்பட்டு நகர பகுதியில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் அதிகாரிகள் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த சூழலில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் 4 அடி உயரம் தண்ணீர் தேங்கியது. காலை 6.30  மணி அளவில் அனிஷா பேகம் என்பவரின் வீடு திடீரென சரிந்து விழுந்து தரை மட்டமானது . இப்படி அடுத்தடுத்து 3 வீடுகள் இடிந்து விழுந்ததில்   4 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சடலங்களை மீட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி சோகமயமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "கனமழையின் காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகளும், ஐந்து பெண்களும் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.


 

இது பதில் இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும்,  படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.